Saturday 21 December 2013

‘புறம்போக்கு’ பிரதர்ஸ்!

''லெனின்கிட்ட, 'ரஷ்யக் கலாசாரத்துல புரட்சி பண்றேன்னு சொல்லிட்டு, ஃப்ரெஞ்சு கலாசாரமான குறுந்தாடியை ஏன் வெச்சிருக்கீங்க?’னு கேட்டாங்களாம். 'புரட்சிங்கிறது நவீனத்தின் ஒரு வடிவம். அப்போ புரட்சி பண்ற நாங்க மாடர்னா, ஸ்டைலாதான் இருக்கணும்... அது ஒண்ணும் தப்பில்லை’னு சொன்னாராம் லெனின்!
சமூகத்துல பகை முரண்பாடு, பகையற்ற முரண்பாடுனு ரெண்டு பிரிவுகள்தான் இருக்கு. மொழி, சாதி, மத முரண்பாடுகள் பகையற்ற முரண்பாடு. வர்க்கரீதியிலான முரண்பாடுகள் பகை முரண்பாடு. நாம பகை முரண்பாடு களின் சிக்கல்களைத் தீர்ப்பதில்தான் முனைப்பு காட்டணும். ஆனா, ஆதிக்கச் சக்திகள் நம் கவனத்தைத் திசைதிருப்பி 'பகையற்ற முரண்பாடு’களோடு நம்மை மல்லுக்கட்ட வைக்குது!'' - இதுவும் இன்னமுமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம். பேச்சில் அடர்த்தியான சுவாரஸ்யம் சேர்ப்பவர், இந்த முறை 'புறம்போக்கு’ என்ற தலைப்போடு களம் இறங்குகிறார். படத்தின் ஆட்டநாயகர்கள்... ஆர்யா - விஜய் சேதுபதி!
''அழுத்தமான கதை, சிந்தனையைத் தூண்டும் திரைக்கதைதான் உங்க ஸ்டைல்... இப்போ நீங்களும் 'ஹீரோ ஃபார்முலா’வில் சிக்கிட்டீங்களா?''
''ஹீரோக்கள் என் ஃபார்முலாவுக்கு சிக்கியிருக்காங்கனு கொஞ்சம் மாத்தி யோசிங்க பிரதர். 'இயற்கை’ பட பட்ஜெட் இன்னும் பெருசா இருந்திருந்தா, அந்தப் படத்தை கல்ட் கிளாஸிக் தரத்துக்குப் பண்ணியிருக்க முடியும். படத்தோட பட்ஜெட்டை அதிகரிக்க, அதில் மார்க்கெட் வேல்யூ சேர்க்கணும். அதனால்தான், ஆர்யா ப்ளஸ் விஜய் சேதுபதி. அவங்க நடிக்கிறாங்களே தவிர, இது முழுக்க முழுக்க ஜனநாதன் சினிமாதான். ரெண்டு ஹீரோக்கள்... ஆனா, படத்துல ஒரு ஹீரோயின்தான். மூக்கும் மூக்கும் இடிச்சுக்கிட்டு ஆர்யா ஹீரோயினோட டூயட் ஆட மாட்டார். Confessions of an Economic Hit Man’ புத்தகமும் கையுமாத் திரிவார். விஜய் சேதுபதிக்கு ரயில்வே கலாசி கேரக்டர். இந்தக் 'கலாசி’ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தேடினோம். அது இந்தி, சம்ஸ்கிருதம், உருது மொழிகளில் கிடைக்கலை. பார்த்தா, அது அரபு வார்த்தை. 'கலாசி’ங்கிற வார்த்தைக்கு 'கைகளால் உழைப்பவன்’னு பொருள். விஜய் சேதுபதி கேரக்டரோட மனநிலை... ரொம்பப் புதுசா இருக்கும். அரிதிலும் அரிதான கேரக்டர். அதனால், இது ஆர்யா-விஜய் சேதுபதி நடிக்கும் ஜனநாதன் சினிமாவேதான்!''
 'புறம்போக்கு’ - படத்தின் கேன்வாஸ் என்ன?''
''பொருளாதார யுத்தம்! கண்ணுக்கே தெரியாத, நம்ம கவனத்திலேயே இல்லாத 10 குடும்பங்கள்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்கனு சொன்னா நம்புவீங்களா? 100 பணக்காரர்களுக்குத்தான் ஒட்டுமொத்த உலகமும் வேலை பார்க்குது. சுருக்கமா ஒரு வரலாறு சொல்றேனே... நெருப்புக்கு நிகராக, மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? மனித உழைப்பு சக்தி. ஒரு மனிதன் பத்து ஆடுகளை மேய்ப்பான், நாலு மனிதர்கள் பத்து பசு மாடுகளைப் பராமரிச்சு பால் எடுப்பாங்க, பத்து மனிதர்கள் ஏக்கர்கணக்கில் விவசாயம் பார்ப்பாங்கனு கண்டுபிடிச்சதுதான், மனுஷனோட மிக முக்கியமான கண்டுபிடிப்பு!
அதன் பிறகுதான் எந்த வசதிவாய்ப்பும் இல்லாத துண்டு மனிதனை, பண்ணை அடிமைகள் ஆக்கினாங்க பண்ணையார்கள். அதுதான் நிலப்பிரபுத்துவம். அப்போ பண்ணையில் இருக்கும் பசு மாடு போடுற சாணியை அடிமைகள் எடுத்துக்கலாம். அதுக்கு பண்ணையார் காசு எதுவும் வாங்கிக்க மாட்டார். 'ஆஹா... வள்ளல் ஆண்டை... நமக்கு சாணியை சும்மாவே கொடுக்கிறார்’னு அடிமைகள் பாராட்டிட்டு சாணியால வரட்டி தட்டி அடுப்பு எரிப்பாங்க. ஆனா, அந்த வரட்டி எரிஞ்சு பிறகு மிஞ்சுற சாம்பல் பண்ணையாருக்குச் சொந்தம். ஆக, சாணியை சாம்பலா மாத்துற அடிமைகளின் உழைப்பை பண்ணையார் இலவசமாச் சுரண்டினார். அதை உடைச்சுப் பிறந்ததுதான் முதலாளித்துவப் புரட்சி. ஆனா, அது மனிதனை உடல் உழைப்பைத் தாண்டி இயந்திரங்களை இயக்கத்தான் பயிற்சி கொடுத்தது. அதாவது, பண்ணை அடிமைகளை தொழிற்கூட தொழிலாளி ஆக்கியது. 'எட்டு மணி நேர வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை’னு சட்டதிட்டங்கள் போட்டது, அந்த உழைப்பாளியின் உற்பத்தித்திறனை அதிகரிக்கத்தான். அந்த நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவப் புரட்சியும் இப்போ எப்படி பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்குனு 'புறம்போக்கு’ பேசும்!''
'ரொம்ப அடர்த்தியா இருக்கே... ப்ளேபாய் ஆர்யாவும், சின்சியர் விஜய் சேதுபதியும் செட் ஆகிட்டாங்களா?''
'' 'நான் கடவுள்’ பண்ணினாரே ஆர்யா... யார்கிட்ட அவர் சிக்குறார்ங்கிறதுதான் முக்கியம். இப்போ படத்துக்காக 'டேப் டான்ஸ்’ பயிற்சியில் ரொம்ப மும்முரமா இருக்கார். நான் எப்பவும் எந்த ஆர்டரும் இல்லாம படம் எடுப்பேன். 'இயற்கை’யில் க்ளைமாக்ஸ்தான் முதல்ல ஷூட் பண்ணேன். அந்த மாதிரி இல்லாம கொஞ்சம் ஆர்டரா ஷூட் பண்ணிக்கலாமானு மட்டும் சேதுபதி கேட்டார். அப்பத்தான் அந்த கேரக்டருக்குள் அவரால முழுசா இன்வால்வ் ஆக முடியும்னு சொன்னார். 'பேராண்மை’யில் 'ஜெயம்’ ரவி அந்தப் பொண்ணுங்களுக்கு மனித உழைப்பு பத்தி வகுப்பு எடுக்கிறதுக்கு முன்னாடி அவருக்கு நான் லெக்சர் எடுத்தேன். அதனாலதான், 'மனித உழைப்பைக் கழிச்சுட்டா கட்டிடம் வெறும் செங்கல்தான். இன்னும் கொஞ்சம் கழிச்சா, செங்கல்லும் வெறும் கணிமண்தான்’னு வந்த வசனங்களை அவர் பவர்ஃபுல்லா பேசினார். அதே மாதிரி இந்த இரண்டு ஹீரோக்களும் பிரிச்சு மேஞ்சிருவாங்க!''
''ஒரு பக்கம் மிஷ்கின் தன்கிட்ட பேசணும்னாலே, 'பத்து புத்தகங்களைப் படிச்சுட்டு வா’னு புத்தகங்களுக்கு நடுவுல இருந்து சொல்றாரு... மறுபக்கம் பிரபு சாலமன், 'நான் புத்தகங்களையே வாசிக்கிறதில்லை’னு சொல்றார். உதவி இயக்குநர்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க?''
''எந்தப் புத்தகத்தையும் படிக்காம இருக்கிறது தப்பு. எல்லாப் புத்தகங்களையும் படினு சொல்றதும் ரொம்பத் தப்பு. தேர்ந்தெடுத்துப் படிக்கணும். உதவி இயக்குநர்கள் மட்டுமில்லை, சினிமா ரசிகர்களும் The Five C’s of Cinematography’-ங்கிற புத்தகத்தைக் கண்டிப்பாப் படிக்கணும். கேமரா ஆங்கிள், கன்டினியூட்டி, கட்டிங், க்ளோஸ்-அப்ஸ், கம்போசிஷன் - இந்த அஞ்சு 'சி’-க்களைப் பத்தி அழகா விளக்கும் அந்தப் புத்தகம். கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட அந்தப் புத்தகம் இப்பவும் உபயோகமா இருக்குனு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்லியிருக்கார். அந்தப் புத்தகத்தை எழுதிய ஜோசப், 'புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அஞ்சு சி தாண்டி இன்னொரு சி இருக்கு. அது சீட்டிங்’னு சொல்லியிருக்கார். ஏன்னா, சினிமால இல்லாத இடங்களை, பொருட்களை காமிச்சு ஏமாத்திரலாம். ஆனா, நான் என் படங்களுக்கு அந்த ஆறாவது 'சி’யை 'கிரியேட்டிவிட்டி’னு வெச்சுக்குவேன். அந்தக் கிரியேட்டிவிட்டியைத் தூண்டுறது வாசிப்புப் பழக்கம்தான். அந்தக் கற்பனை தரும் தன்னம்பிக்கைதான், ஆர்யாவை ஹீரோயின்கூட நிக்க வெச்சு ஸ்டில்ஸ் எடுக்காம, அவர் கையில் புத்தகத்தைக் கொடுக்க வெச்சிருக்கு. அதானல, வாங்க... வாசிப்போம் பிரதர்!''


Sunday 6 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

ட்டகாசம்’ மிஷ்கின்!
படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை’) இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்’ இல்லை... இப்படிப் பல 'இல்லை’கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்!
தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்’ செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, மர்மமான ட்ரீட்மென்ட், மனிதம் உணர்த்தும் கதாபாத்திரங்கள்... என ஒவ்வொரு காட்சியும், அதன் பின்னணியும் ஆயிரமாயிரம் கதை சொல்கின்றன!
புலிகளின் வியூகங்களும், அதை முறியடிக்கும் ஓநாயின் ஆட்டங்களுமாக இடைவேளை வரை விறுவிறு திகுதிகுவென விரைகின்றன காட்சிகள். ஆனாலும், இது என்ன படம், ஏன் இத்தனை ஓட்டம், 'ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் ஒரு மூலையில் சந்தேகங்கள் குடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த அத்தனை சந்தேகங்களையும் போக்க பெரிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து நமக்குள் இருக்கும் சினிமா ரசிகன் காத்திருக்க, இரண்டு மெழுகுவத்திகளுக்கு இடையே மிஷ்கின் அதை அவிழ்க்கும் இடமும் விதமும்... அபாரம். எளிய வார்த்தைகள் மூலம் விரியும் அந்த வலியான கதை சொல்லல், நம் மனசுக்குள் விஷ§வலாக விரிவது, புது அனுபவம். நன்றி மிஷ்கின்!
'வுல்ஃப்’ பாத்திரத்தில் மிஷ்கின். ஓர் ஓநாயின் உடல் மொழியையே தனக்குள் புகுத்தியிருக்கிறார். வேட்டைக் களத்தில் ஒவ்வோர் உறுப்பினரை இழக்கும்போது தலைகுனிந்து கவலைப்படுவதும், அம்மாவையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு வலியோடு ஓடுவதும், ஸ்ரீயை நம்பியும் நம்பாமல் தன் ஆட்டத்தில் ஈடுபடுத்துவதுமாக... அசரடிக்கிறார். வெடவெட ஸ்ரீக்கு, இதில் மிஷ்கினுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு மனிதாபிமானத்தில் மிஷ்கினைக் காப்பாற்றிவிட்டு, போலீஸிடம் சிக்கிப் படும்பாட்டில் மிரட்சி, வெறுப்பு, கோபம், இயலாமை... என அனைத்து முகபாவங்களையும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார்.
அந்த மின்சார ரயில் துரத்தலும், ஓடும் காருக்குள் மிஷ்கின், வில்லனை வெளியேற்றும் சமயோசிதமும்... ஒரு ஆக்ஷன் படத்தின் உச்சகட்ட உதறல் கொடுக்கும் காட்சிகள்! அப்படியான விறுவிறு த்ரில்லருக்கான வியூகங்கள் மட்டுமே இருந்திருந்தால், இது இன்னொரு சினிமா. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அதன் பின்னணிக்கேற்ப வார்க்கப்பட்டிருப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவன் மனநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை நச்நச்சென உணர்த்தும் காட்சிகளுமே, படத்தை வேறு தளத்துக்கு அழைத்துச்செல்கின்றன!
அத்தனை ரிஸ்க் எடுத்து ஸ்ரீ காப்பாற்றிய மிஷ்கினை, அவரே கொல்லவேண்டிய இக்கட்டுக்கு ஆளாகும் காட்சிகள், நிதர்சனத்துக்கு மிக நெருக்கம். படித்தவர்களும் பொறுப்பானவர்களும் தங்கள் கடமையை மறக்க, ஒரு பிச்சைக்காரனின் உதவியோடு நல்லது நடக்கும் ஆரம்பக் காட்சிகள், துப்பாக்கிச் சூடு வாங்கும் ஒவ்வொரு போலீஸும் விநோத வார்த்தை பிரயோகிப்பது, அம்மாவின் காலுக்குச் சூடு வைத்தவர்களின் காலைக் காயப்படுத்துவது, குண்டடி வாங்கிய எட்வர்டு அப்பாவிடம் வேறு வழி இல்லாமல் துப்பாக்கியைக் கொடுக்க, அவர் தான் தெரியாமல்கூட யாரையும் சுட்டுவிடக் கூடாது என்று தலைக்கு மேல் உயர்த்தி துப்பாக்கியை வெடிப்பது, அத்தனை போலீஸ் கும்பலிலும் நல்ல உள்ளம் படைத்த ஓர் அதிகாரி இருப்பது, எந்த போலீஸையும் கொல்லாமல் காயப்படுத்தி, மயக்கப்படுத்தி மிஷ்கின் தப்பிப்பதுமான காட்சிகளில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சக மனிதர்கள் மீது ப்ரியம் விதைக்கிறது திரைக்கதை.
மூன்று போலீஸ்காரர்கள் வில்லனின் ஆட்களால் கொல்லப்படுகிறார்கள். முதல் இருவர் சாகும்போது இந்து, கிறிஸ்துவ கடவுள்களின் பெயர்களைச் சொல்லி விழுவார்கள். மூன்றாவது நபரான கான்ஸ்டபிள், 'ஐயா’ என்று சொல்லிக் கும்பிட்டு, வாய்தா வாங்கி, உயிர் பதைத்து நிற்பார். ஆயுள் முழுக்க 'ஐயா... ஐயா’ என்றுஅழைத்தே பிழைக்கும் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை இயல்பை பொளேரென அறையும் சாம்பிள்!
போலீஸ் அதிகாரி ஷாஜி, திருநங்கை ஏஞ்சல் கிளாடி, மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன், சிறுமி சைதன்யா... என அறிமுகப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அசத்தல். வழக்கமான மிஷ்கின் சாயல் இல்லாமல், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மையோடு இருப்பது ஆச்சர்யம்! ஆனால், தமிழ்நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத 'சாமுராய்’ பாணி வாள் வீரர்களைப் புகுத்தி தன் டச் கொடுத்துவிட்டார் மிஷ்கின்.
மிஷ்கின்-ஸ்ரீ சந்திப்புக்குப் பிறகுதான் பரபரக்கிறது படம். ஆனால், அந்தச் சந்திப்புக்கான தேவை என்ன? 'ஆட்டுக்குட்டி’க் குடும்பத்தைக் காப்பாற்றுவது மட்டுமே நோக்கமென்றால், அதைத் தவிர்த்திருக்கலாமே ஓநாய்? நள்ளிரவுக்கு மேல் மிஷ்கினுக்கு அதீத மயக்க மருந்து செலுத்தி மேஜர் ஆபரேஷன் செய்கிறார் ஸ்ரீ. ஆனால், காலையிலேயே மயக்கம் தெளிந்து தப்பிவிடுகிறார் மிஷ்கின். தமிழ் சினிமாவின், 'இட்ஸ் எ மெடிக்கல் மிராகிள்’களில் இதுவும் ஒன்று!
ஆரம்பக் காட்சி முதல் இறுதி வரை யாரேனும் யாரையேனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் என்றாலும் இவ்வளவு வன்முறையா?
இருளும் ஒளியும் கலந்த இரவு சென்னையை ஒரு பூனையைப் போல கண்காணித்து திக் திக் திகில் ஊட்டுகிறது பாலாஜி வி.ரங்காவின் ஒளிப்பதிவு. ஸ்ரீ திரையில் தோன்றும்போது பதறவைக்கும் பின்னணி இசை, மிஷ்கின் தோன்றும்போது நெகிழ்த்தி, மாற்றுத் திறனாளிகளைக் காட்டும்போது உருகவைக்கிறது. 'முன்னணி - இசைக்கோப்பில்’ அழுத்தமாக முத்திரைப் பதிக்கிறார் ராஜா.
'புலி-ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி’ கதையை 'வணிக சமரசம் இல்லாமல்’ படைத்ததற்கும், 14 கொலைகள் செய்த ஒரு சீரியல் கில்லர் உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நம் மனதை நெகிழ்த்தியதற்கும்... இந்த ஓநாயை ஆசை ஆசையாக அரவணைக்கலாம்!
- விகடன் விமர்சனக் குழு

Saturday 5 October 2013

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

விருப்பம் இல்லாமல் ஜோடி சேர்ந்த 'ராஜா ராணி’க்கு இடையிலான 'மௌன ராகமே’ படம்!
தத்தமது 'லவ் பேர்டு’களை இழந்த ஆர்யாவும் நயன்தாராவும் பெற்றோர் திருப்திக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த 'ஆங்ரி பேர்டு’களுக்கு இடையிலான டிஷ்யூம் டிஷ்யூம், உருகும் ஃப்ளாஷ்பேக், இறுகும் நெருக்கம் என்று பார்த்த சினிமாதான். ஆனால், ராஜா ராணி காலத்துக் கதையை டி-20 யுகத்தின் 'ரிச் டச்’ செய்தவகையில், அறிமுக இயக்குநர் அட்லீக்கு கலர்ஃபுல் வெற்றி!
சர்ச்சில் திருமண உறுதிமொழி ஏற்பின்போது நயன்தாரா தடுமாறுவது, அப்பா சத்யராஜை 'டார்லிங்’ என்று அழைத்து பீர் வாங்கிக் கொடுப்பது, காதலன் ஆர்யாவை நஸ்ரியா 'பிரதர்’ என்று வம்பு இழுப்பது... என, படம் முழுக்க இளைஞர்களின் 'ஜஸ்ட் லைக் தட்’ மனநிலை பளிச் பளிச்.
ஏர்வாய்ஸ் வாடிக்கையாளராக எகிறும் நயனிடம், 'யக்கா.. இன்னைக்குதான்க்கா வேலைக்கு வந்திருக்கேன். நான் வேணா உன் பில்லுக்கு பணம் கட்டிடுறேன்க்கா’ என்று பம்மிப் பதறும் 'கஸ்டமர் கேர்’ ஜெய் அத்தியாயம், செம சிரிப்பு சிக்குபுக்கு.
'நான் அழுவுலியே... என் கண்ணு வேர்க்குது’, என்று 'பயந்து வருது’ கேரக்டரில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் ஜெய். அட, துளி க்ளாமர் இல்லாமல் அழுகையில் மேக்கப் கரைந்த நிலையிலும்... வசீகரிக்கிறார் நயன்தாரா. வெல்கம் பேக் நயன்!
 
நஸ்ரியா, நயன்தாராவை மருத்துவப் படுக்கைகளில் பார்த்துக் கலங்கி கண்ணீர்விடும்போது... அட, ஆர்யா நடிச்சிருக்கார்பா! அந்த 'ரிங்க ரிங்கா’ ஆட்டம் ஒண்ணு போதும்... நீங்கள்லாம் நல்லா வந்துட்டீங்க நஸ்ரியா! 'முதலிரவு நடக்கலையா? அப்போ குஸ்கா மட்டும்தான் சாப்பிட்டியா?’ என ஆர்யாவைக் கலாய்க்கும் சந்தானம், படத்தின் ஸ்ட்ராங் பில்லர். 'என் பொண்ணு ஒருதடவைகூட உங்களுக்கு பீர் வாங்கிக் கொடுத்தது இல்லையா?’ என்று ஆச்சர்யப்பட்டு வருத்தப்படும் இடத்தில் சத்யராஜ்... க்ளாஸ்!
'நான் யாரையோ வெச்சிருக்கேன்னு என் புருஷன் சொல்றாரு’ என்று கலாய்க்கும் மதுமிதாவிடம், 'அது... நீங்க ரிங் டோனை வெச்சிருக்கீங்க’ என்று ஜெய் சொல்லும் அப்பாவியான பதிலும், 'உலகத்துல யாருமே பொறக்கும்போது 'மேட் ஃபார் ஈச் அதரா பொறக்கிறதில்லை... வாழ்ந்துகாட்டுறதுலதான்’ எனும் நயனின் புரிதலுமான வசனங்கள்தான், கொஞ்சம் நீளமான படத்தை அலுப்பு இல்லாமல் நகர்த்துகின்றன.
படம் முழுக்க ரங்கோலி உற்சாகத்தைப் புதைத்திருக்கிறது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் 'ஹம்மிங்’ ரகப் பாடல்களும், நெகிழவைக்கும் பின்னணி இசையும் நல்ல காம்போ!  இளமை துள்ளும் குறும்புக் குற்றால சாரலை பாடல்களில் தெளித்திருக்கிறார்கள் கவிஞர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார்.
அத்தனை நீளமான க்ளைமாக்ஸ் ஏன் அட்லீ? ரம்மி சேர்ந்த பின்னும் ஆட்டம் நீள்கிறது. ஆனாலும், சுவாரஸ்ய 'ஷோ’ காட்டுகிறார்கள் இந்த ராஜா ராணி!
நன்றி-விகடன்